மானாமதுரையில் உள்ள ஐயங்கார் பேக்கரிகளில் 'எம்ஆர்பி' விலைக்கு மேல் அதிகமாக விற்பனை செய்யப்படும் பாட்டில் குளிர்பானங்கள்.
நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புத்துறை?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறிய பெட்டி கடைகள் முதல் பேக்கரி உள்பட பெரிய அளவிலான சில கடைகளில் பாட்டில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குளிர்பானங்கள் மேக்ஸிமம் ரீடைல் பிரைஸான "எம்ஆர்பி" என்கின்ற நிர்ணயித்த விலைக்கும் மேல் அதிகமாக கடை விற்பனையாளர்கள் கல்லா கட்டி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன் வைத்தனர். இதுகுறித்து சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், "பாட்டில் குளிர்பானங்களின் 'எம்ஆர்பி' விலையானது பாட்டிலில் சில குளிர்பான பாட்டில்களில் 10 ரூபாய் எனவும், சில குளிர்பான பாட்டில்களில் 12 ரூபாய் எனவும் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில், சில கடை உரிமையாளர்கள் 15 ரூபாய் வரை விற்பனை செய்து, அதற்கான பில் கொடுக்காமல் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக லேஸ் பாக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள ஐந்து ரூபாய் எம்ஆர்பிக்கு மேல் யாரும் விற்பனை செய்வதில்லை, அதேபோல் குடிநீர் கேனில் உள்ள எம் ஆர் பி விலையான 20 ரூபாய்க்கு மேல் யாரும் விற்பனை செய்வது கிடையாது, மேலும் பிளாஸ்டிக் கேனில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் அச்சிடப்பட்ட எம்ஆர்பி-க்கு மேல் யாரும் விற்பனை செய்வது கிடையாது, ஆனால் கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களுக்கு மட்டும் இத்தகைய வழிமுறையை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக அவர்களே ஒரு விலையை நிர்ணயித்து விற்பனை செய்து கல்லா கட்டி வருவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். எந்த ஊரு விற்பனையாளரும் எம்ஆர்பி விலைக்கே கொள்முதல் செய்து எம்ஆர்பி விலைக்கு விற்பனை செய்வது கிடையாது எனும் போது, பாட்டில் குளிர்பானங்கள் மட்டும் அச்சிடப்பட்ட எம்ஆர்பி விலையான பத்து ரூபாய்க்கு கொள்முதல் செய்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனரா? என்ன சில நுகர்வோர் தங்கள் சந்தேகத்தை கேள்வியாக முன் வைத்தனர்.
எம் ஆர் பி என்றால் என்ன என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் காசாளர்கள் பணிபுரிந்து வருவது வேதனை அளிப்பதாகவும், கடையின் உரிமையாளர்கள் எம்ஆர்பி விலைக்கு மேல் விற்பனை செய்ய சொல்லி பணிபுரிபவர்களை வற்புறுத்தி வருகின்றனரா என விசாரணை மேற்கொண்டு அவ்வாறு விற்பனை செய்ய சொல்லி வற்புறுத்திய கடை உரிமையாளர்கள் மீது தகுந்த கடும் நடவடிக்கை எடுக்கவும் மற்றொரு சில வலியுறுத்தினர்.
இப்பிரச்சினை குறித்து 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல' சில கடை உரிமையாளர்களிடமும், அதிலும் குறிப்பாக மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஐயங்கார் பேக்கரியில் பாட்டிலில் அச்சடிக்கப்பட்டுள்ள எம்ஆர்பி விலையை காண்பித்து கேள்வி எழுப்பினால், அனைத்து கடைகளிலும் இவ்வாறுதான் விற்பனை செய்கின்றனர் எல்லோரிடமும் சென்று கேளுங்கள், யாரிடம் சென்று வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள், பாட்டில் குளிர்பானங்களில் உள்ள எம்ஆர்பி விலைக்கு விற்பனை செய்ய முடியாது என்று கூச்சமே இல்லாமல் பதில் கூறுகின்றனர்.
எனவே அரசின் சட்ட விதிமுறை, வழிகாட்டு நெறிமுறைகளை மீறி எம்ஆர்பி விலையை தாண்டி 15 ரூபாய் வரை பாட்டில் குளிர்பானங்களை விற்பனை செய்து வரும் கடைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தல், கடை உரிமையாளர்களின் மீது கடும் நடவடிக்கை, எச்சரிக்கை மற்றும் அபதார தொகை விதித்தல் போன்ற கடும் நடவடிக்கைகளை தேசிய மற்றும் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புத்துறையினர் உடனடியாக மேற்கொண்டு, யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத இப்பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாடிக்கையாளர்கள், நுகர்வோர், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது".
No comments:
Post a Comment