நீட் தேர்வு ஊழல் : 4 வருடமாக கூறி வருகிறோம் - முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு ப.சிதம்பரம்.
மாண்புமிகு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர், முன்னாள் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு, "அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும். தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். நீட் தேர்வு ஒரு ஊழல், இதை நாங்கள் கடந்த 3-4 ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த நுழைவு தேர்வை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும். அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும். அகில இந்திய தேர்வை அரசு கைவிட்டு, மாநிலங்களை சேர்க்காமல் மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் நடத்த வேண்டும்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975 ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சியை அறிவித்தார். அப்போது அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியாவின் கருப்பு நாள் என எதிர்க்கட்சிகள் எமர்ஜென்சியை குறிப்பிடுவார்கள். இந்நிலையில் தற்போது ஜூலை 25-ந்தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில், எமர்ஜென்சி ஒரு தவறு என்பதை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார்" என காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் "பா.ஜ.க. ஏன் இன்னும் பின்னோக்கி 18-வது அல்லது 17-வது நூற்றாண்டு காலத்திற்கு செல்லவில்லை? தற்போது வாழும் சுமார் 75 சதவீத இந்தியர்கள் 1975-க்கு பிறகு பிறந்தவர்கள்தான். எமர்ஜென்சி ஒரு தவறு, அதை இந்திரா காந்தி ஏற்றுக்கொண்டார். இனி யாரும் எளிதில் எமர்ஜென்சியை அறிவிக்க முடியாதபடி அரசியலமைப்பை நாம் மாற்றியிருக்கிறோம்.
எமர்ஜென்சியால் ஏற்பட்ட நன்மை, தீமைகள் குறித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு விவாதிப்பதால் என்ன பயன் இருக்கிறது? கடந்த காலத்தை பா.ஜ.க. மறக்க வேண்டும். நாம் கடந்த காலத்தில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டோம்", என டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment