விவசாய பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு: வேளாண் அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 March 2023

விவசாய பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பு: வேளாண் அமைச்சர்.


வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  ஆகியோர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் மேற்கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர், ஆணைக்கிணங்க சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்துகேட்பு கூட்டத்தினை,  (07.03.2023) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  மற்றும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் மேற்கொண்டனர்.


இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வரவேற்புரையாற்றினார். மேலும், இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் ஃ ஆணையர் சர்க்கரைத்துறை சி.விஜயராஜ்குமார், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திரு.சி.சமயமூர்த்தி, இயக்குநர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆ.அண்ணாதுரை ஆகியோர் வேளாண்மை நிதி நிலை அறிக்கை தொடர்பான விளக்கவுரையினை எடுத்துரைத்தனர். 


மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  ஆ.தமிழரசிரவிக்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன் மாவட்ட வருவாய் அலுவலர் (அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை)  செந்தில்குமாரி, ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் வேளாண்மை இணை இயக்குநர் இரா.தனபாலன் தலைமைப் பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை முருகேசன் இணை இயக்குநர் (விதைச்சான்று மற்றும் அங்கக சான்று) கே.ஜெயசெல்வின் இன்பராஜ், தோட்டக்கலை துணை இயக்குநர் அழகுமலை, சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்  மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வேளாண்மை இணை இயக்குநர்கள், தோட்டக்கலை துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் பெருங்குடி மக்கள் பயன்பெறுகின்ற வகையில், வேளாண்மைக்கான தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், தமிழகத்தில் சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து மண்டல வாரியாக விவசாயிகளிடம் வேளாண்மையில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. 


அதன்படி, திண்டுக்கல் திருநெல்வேலி மயிலாடுதுறை செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தை சுற்றியுள்ள சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து அக்கூட்டத்தின் வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயச் சங்க உறுப்பினர்களின் சார்பில் 31 விவசாயிகளிடமிருந்தும் திருநெல்வேலி மாவட்டத்தில்  நடைபெற்ற கூட்டத்தில் விவசாயச் சங்க உறுப்பினர்களின் சார்பில் 26 விவசாயிகளிடமிருந்தும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயச் சங்க உறுப்பினர்களின் சார்பில் 39விவசாயிகளிடமிருந்தும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயச் சங்க உறுப்பினர்களின் சார்பில் 39 விவசாயிகளிடமிருந்தும் மற்றும் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயச் சங்க உறுப்பினர்களின் சார்பில் 73 விவசாயிகளிடமிருந்தும் என மொத்தம் 208 விவசாயிகளிடமிருந்து விவசாய சங்கத்தின் வாயிலாக கருத்துக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து, இன்றையதினம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தின் வாயிலாக சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகளிடமிருந்து கருத்துக்கள் பெறப்படவுள்ளன. இக்கூட்டங்களின் மூலம் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தின் சார்பில், விவசாயிகளுக்கென செயல்படுத்த வேண்டிய கூடுதல் திட்டங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய வசதிகள், அதற்கான நிதி நிலை ஆதாரங்கள் ஆகியனக் குறித்து,  தமிழ்நாடு முதலமைச்சர், மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று அக்கோரிக்கைகள் தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெறவுள்ள 2023-2024-ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கையில் சமர்ப்பித்து உழவர்களின் நலன் காக்கின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


இக்கூட்டத்தின் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கருத்துக்கள் பெறப்படுவது மட்டுமன்றி, முன்னதாக பத்திரிக்கைகளின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், உழவர் செயலி மற்றும் மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவும் இதுவரை 2253 விவசாயிகளிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. 


விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை  மதிப்பூட்டுப் பொருட்களாகவும், தொழில் முனைவோர்களாகவும் உருவெடுக்கும் வகையிலும், மேலும். வேளாண் விற்பனை வணிகத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வசதிகளும் வழங்கப்பட்டு மதிப்பூட்டு விளைப் பொருட்களை விற்பனை செய்கின்ற வகையிலும், இதுபோன்று விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள்  தமிழ்நாடு முதலமைச்சர், செயல்படுத்தப்பட்டு தமிழகத்தில் விவசாய புரட்சி ஏற்படுத்துகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


விவசாயிகளுக்கென தனி நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்கின்ற கூட்டத்தொடரை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்படுத்திக் கொண்டு, விவசாயிகளின் உற்றத்தோழனாக திகழ்ந்து வருகிறார்கள். ஆகவே, இன்றையதினம் சிறப்பான நடைபெற்று கொண்டிருக்கும் இக்கூட்டத்தில் பங்கு பெற்றுள்ள விவசாயப் பிரதிநிதிகள் தங்களுக்கான தேவைகள் மற்றும் பயனுள்ள திட்டங்கள் ஆகியனக் குறித்து எடுத்துரைத்து பயன்பெறலாம் என,  வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  தெரிவித்தார்.


கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த 20 மாதங்களாக தமிழகத்தில் நல்லாட்சியினை வழங்கி, இந்திய துணைக்கண்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக உருவெடுக்கும் பொருட்டு அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து, பொதுமக்களுக்கு தேவையான மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து அத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். 


குறிப்பாக, விவசாயப் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் வேளாண் துறைக்கென்று தனி நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்ய முதல்முறையாக கருத்து கேட்பு கூட்டமும் விவசாயிகளிடம் மண்டல வாரியாக நடத்துவதற்கு ஆணை பிறப்பித்தார்கள். அதனடிப்படையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்கூட்டத்தின் மூலம் விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து, வேளாண் துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் மற்றும் விவசாயத் தொழிலில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கருத்து கேட்பு மேற்கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை பெற்று, அதற்கான முறையான தீர்வுகளை காண்பதற்கு இவை அடிப்படையாக அமைகிறது.


தமிழ்நாடு முதலமைச்சர், மாநிலம் முழுவதும் சீரான சமமான வளர்ச்சியை பெறவேண்டும் என்பதற்காக அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு, சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்கள். 


தமிழக அரசின்; வரலாற்றில் இல்லாத அளவிற்கு  தமிழ்நாடு முதலமைச்சர் , நேரடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திட்ட செயல்பாடுகள் குறித்தும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும், குறிப்பாக சட்ட ஒழுங்குகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டு வருவது சிறப்பான நிர்வாகத்திற்கான சான்றாக விளங்குகிறது.  


முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், ஆட்சிக்காலத்தின் போது வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் அவர்களுக்கான பல்வேறு வேளாண் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி பாதுகாத்து வந்தார்கள். அவ்வழியில்,  தமிழ்நாடு முதலமைச்சர், அவர்களுக்கான பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி,  உழவர்களின் உற்றத்தோழனாக திகழ்ந்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் நடத்தப்படுகின்ற இக்கருத்துக் கேட்பு கூட்டத்தில், தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இதில் பதிவு செய்து, அக்கருத்துக்கள் அனைத்தும் தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ள வகையில் அடிப்படையாக அமைவதற்கென, தங்களது பங்களிப்பினை சிறப்பாக அளித்திட வேண்டும் என,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad