சிவகங்கை அருகே விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது; அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 November 2022

சிவகங்கை அருகே விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது; அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்பு.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கோட்டையூர் பேரூராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.3.56 இலட்சம் மதிப்பீட்டில், 70 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட, தஞ்சாவூர் அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தெரிவிக்கையில்: முன்னாள் முதலமைச்சர் காமராஜர், முதலமைச்சராக இருந்த போது தமிழக மக்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்காக ஓர் ஆசிரியர் பள்ளியினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தினார்கள். இருப்பினும், மாணவர்களின் வருகை குறைவாக இருந்த சூழ்நிலையை கண்டறிந்து மதிய உணவு திட்டத்தினை செயல்படுத்தினார். 


இதன்மூலம் ஏராளமானவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக,  முதலமைச்சராக இருந்த  அண்ணா, ஓர் ஆசிரியர் பள்ளியினை ஈராசிரியர் பள்ளியாக தரம் உயர்த்தினார்கள். அன்னாரின் வழியில் செயல்பட்ட  டாக்டர் கலைஞர், அனைவருக்கும் இலவச கல்வியினை வழங்கி புதிய வரலாற்றினை உருவாக்கினார்கள். 


அதேபோல், மதிய உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதற்காக வாரத்தில் ஒருநாள் முட்டையுடன் உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இத்திட்டத்தினை மேலும் ,விரிவுப்படுத்தி வாரத்திற்கு 5 நாட்கள் முட்டையுடன் உணவு வழங்கி ஆரோக்கியமான மாணவச் சமுதாயத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் ஏற்றத்தாழ்வின்றி கல்வி பயிலவும் அனைவரும் சமம் என்ற சூழ்நிலையை உருவாக்கிடவும் பள்ளிச்சீருடையும் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. 


தொலைதூரத்திலிருந்து பள்ளிக்கு வந்து செல்வதற்காக இலவச பேருந்து பயண அட்டையும் தமிழக அரசால வழங்கப்படுகின்றன. அதன்படி, அவர்கள் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்,  காலை உணவுத் திட்டத்தினை செயல்படுத்தி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.


கடந்த ஆட்சிக்காலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை அனைவரும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தி, 11-ஆம் வகுப்பு பயிலும் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மிகவும் திறமையானவர்கள் மற்றும் பல்வேறு தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். ஆகையால், அரசுப்பள்ளியில் மாணாக்கர்களை சேர்ப்பதனால் திறமையானவர்களிடம் கல்வி கற்கும் சூழ்நிலை மாணாக்கர்களுக்கு ஏற்படுகிறது.

 

தற்போது, அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி கற்பதிலும் வேலைவாய்ப்புக்களிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளியில் பயில்வதே ஒரு பெருமை என்ற சூழ்நிலை, தமிழ்நாடு முதலமைச்சரால், உருவாக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை கல்வி கற்பது பெருமை என்ற தவறான எண்ணத்தினை களைந்து அரசுப்பள்ளியில் தங்களது குழந்தைகள் கல்வி கற்கச்செய்ய முன்வர வேண்டும். 


பள்ளி மாணாக்கர்களுக்கு பயன்பெறும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் ஒன்றான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், இன்றையதினம் கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட, தஞ்சாவூர் அருணாச்சலம் செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 33 மாணவர்களுக்கு தலா ரூ.5,175வீதம் ரூ.1,70,775 மதிப்பீட்டிலும் மற்றும் 37 மாணவியர்களுக்கு தலா ரூ.4,992 வீதம் ரூ.1,84,704 மதிப்பீட்டிலும் என மொத்தம் 70 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.3,55,479 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.


இந்நிகழ்ச்சியின் போது, மேற்கண்ட அரசுப்பள்ளியில் 2021-2022-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்களுக்கு ஊக்கத்தொகையினை  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் முதல் பரிசுத்தொகை ரூ.5,000, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2,000 ஆகியவைகளையும் மற்றும் புரவலர் திட்டத்தின் கீழ் மேற்கண்ட பள்ளியின் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும், தலா ரூ.10,000 வீதம் பங்களிப்புத் தொகையினையும் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.


இதுபோன்று, பள்ளிக்கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு மாணாக்கர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனை மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் பயின்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என,  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கோட்டையூர் பேரூராட்சி, பாரி நகரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில், ரூ.6.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 12 – 63 KVA மின்மாற்றினை, 62 பயனாளிகளுக்கு பயனுள்ள வகையிலும், தடையில்லா மின்சாரம் கிடைத்திடும் வகையிலும் இன்றையதினம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப.,  தலைமையில், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , முன்னிலையில் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.சுவாமிநாதன், பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் மின்வாரியத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad