இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது, முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ. 200, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 300, பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி, தொடர்ந்து பதிவினைப் புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72, 000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தினசரி கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல்வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். மேற்கண்ட தகுதிகள் உள்ள இளைஞர்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment