ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கல்விக்கடன் முகாமில், தகுதியான மாணாக்கர்களுக்கு உடனடி கடன் அனுமதிக்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் வழங்கி தெரிவிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், அனைத்து நலத்திட்டங்களையும் வழங்கி, அவர்களின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டத்தில் கல்லூரி மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடத்திட மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களுக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபம் ஆகிய இடங்களில் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம் இன்றையதினம் காலை 10.00 மணி முதல் தொடங்கி மாலை 05.00 மணி வரை நடைபெற்றது.

இம்முகாமில், அனைத்து வட்டாரங்களிலும் மொத்தம் 233 மாணாக்கர்கள் கலந்து கொண்டு, மொத்தம் ரூ.8.40 கோடி அளவில் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பங்கள் சமர்ப்பித்துள்ளனர். அதில், தகுதியான 34 மாணாக்கர்களுக்கு ரூ.1.87 கோடி அளவில் உடனடி கடன் அனுமதிக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணாக்கர்களின் மனுக்கள் மீது மறு பரிசீலனை மேற்கொண்டு, உரிய கடனுதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட வங்கிகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று மாணாக்கர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பயனுள்ள வகையில், திட்டங்களை செயல்படுத்தி மாணாக்கர்களின் நலன் காக்கின்ற அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது, என, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் இரா.சிவராமன், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சோ.சண்முகவடிவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கா.இளவழகன் மற்றும் வங்கி மேலாளர்கள், வங்கியாளர்கள், மாணாக்கர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment